Saturday, February 19, 2011

பூகோஸ்(காலிஃப்ளவர்)சூப்


ஒரு கை துவரம் பருப்பை நான்கு கப் தண்ணீரில் 
குழைய வேக வைத்து எடுத்துக்கொண்டு ஒரு 
காலிஃபிளவரை பெரிய துண்டுகளாக வெட்டி,பெரிய
வெங்காயம் ஒன்று நீளவாக்கில் வெட்டி, பச்சை
மிளகாய் ஒன்று இரண்டாக வகுந்து குறுக்கே வெட்டி, 
தக்காளி ஒன்று பொடியாக இப்படி எல்லாவற்றையும் 
வெட்டி வைத்துக்கொண்டு..

சட்டியை அடுப்பில் ஏற்றி ஒரு கரண்டி நெய்விட்டு
அதில் ½ டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, ½ டீஸ்பூன்
பெருஞ்சீரகம்,½ டீஸ்பூன்(கரு)மிளகு,1சிறிய லவங்க
இலை,1சிறிய துண்டு பட்டை,இவைகளை போட்டு
பொரிந்ததும் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு,அத்துடன்
வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு கிண்டி
பச்சைமிளகாயையும் போட்டு ஒரு கிண்டு கிண்டி 
தக்காளியையும் சேர்த்து நன்றாக மசிந்து வெந்ததும் 
காலிஃப்ளவரை சேர்த்து, பருப்பு வேக வைத்த
தண்ணீரை அதில் ஊற்றி, பருப்பை நன்கு மசித்து
சேர்த்து மூடி வைத்து சிறிது நேரம் கொதித்த பிறகு
தேவையான உப்பு சேர்த்து,காலிஃப்ளவர் வெந்தது
பார்த்து இறக்கிவிடவேண்டும்.


















சுடச்சுட சாப்பிட்டால் மிக ருசி.

பிகு:மேலே குறிப்பிட்டிருக்கும் செய்முறை அளவு மூன்று
பேருக்கானது.

காலிஃபிளவர் அதிகம் வேகக்கூடாது.முக்கால் பதம்
வெந்தால் ருசி.

காரம் வேண்டாம் என நினைப்பவர்கள் பாதி அல்லது
கால் பச்சைமிளகாய் சேர்த்தால் போதுமானது.

சூப்பிற்கு பருப்பு வேகவைத்த தண்ணீர் மட்டும் போதும்.
பருப்பை சாம்பாரிலோ அல்லது பொரியலிலோ சேர்த்து 
கொள்ளலாம். சூப் மட்டும்தான் சமைக்கப்போகிறோம்
என்றால் பருப்பை கொஞ்சமாக(ஒருகை)வேகவைத்து
சேர்க்கலாம்.
   

Wednesday, January 12, 2011

மண்டி

காய்கறிகள்:கத்தரிக்காய்,உருளைக்கிழங்கு,வாழைக்காய்,
முருங்கைக்காய்,வெண்டிக்காய்,இவைகளை சிறிய 
துண்டங்களாக வெட்டி இரண்டு கப் எடுத்து கொள்ள
வேண்டும்.

மொச்சை ¼ கப் முதல் நாள் ஊறவைத்தது.,தேங்காய் 
மெல்லிசாக கீறியது ஐந்து 

ஒரு தக்காளி,சிறிய வெங்காயம் தேவையான அளவு, 
பூண்டு 5 பல்,(பூண்டு வெங்காயம் வெட்டவேண்டியதில்லை),
பச்சைமிளகாய் 3 (லேசாக வகுந்து போடலாம்),வரமிளகாய் 2.


(சாதம் சமைப்பதற்கு முன் மறவாமல்)அரிசியில் உள்ள
தூசிகள் போக ஒரு கப் தண்ணீர்விட்டு மேலாக அலசி

முதல் தண்ணீரை கீழே ஊத்தியபிறகு 

மேலும் இரண்டு தடவை இரண்டு கப் தண்ணீரை சிறிது 
சிறிதாக ஊற்றி உரசி கழுவி(மண்டி)எடுத்து 


அதில் தேவையான உப்பு புளி போட்டு 

கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவேண்டும்.

சட்டியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை
ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு,உளுத்தம்பருப்பு ஒவ்வொரு
டீஸ்பூன்
  
போட்டு பொரிந்ததும் பெருங்காயம் ஒரு பிஞ்ச், வர
மிளகாய்,கறிவேப்பிலை சிறிது கிள்ளிப் போட்டு,பின் 
பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து கிளறி, அதன்பிறகு 
வெண்டிக்காய் சேர்த்து வழு வழுப்பு குறைந்ததும் தக்காளி 
சேர்த்து உடன் மற்ற காய்கறிகளையும் சேர்த்து சிறிது 
நேரம் கிளறி நன்கு தெறங்கியதும் உப்பு புளிகரைத்து 
வைத்துள்ள மண்டியை (தண்ணீரை) ஊற்றி, அத்துடன் கீறிய 
தேங்காய், ஊறிய மொச்சையையும் போட்டு கிளறி மூடி 
வைத்து நன்றாக வெந்தது பார்த்து இறக்க வேண்டும்.


மண்டி சாதத்துடன் அல்லது இட்லி தோசையுடனும் சேர்த்து 
சாப்பிடலாம். 

பிகு: 
இந்த மண்டியில் மாங்காய் வத்தல் சேர்த்தால் ருசி கூடும்.

வாய்வு என்று நினைப்பவர்கள் மொச்சையை தவிர்க்கலாம்.

பூண்டு பிடித்தால் சேர்க்கலாம்..

கீரைத்தண்டு,கேரட்,பீன்ஸ்,அவரைக்காய்,இப்படி எந்த காய்கறிகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

பச்சைமிளகாய்க்கு பதில் ஊசிமிளகாய் சேர்த்தால்(பச்சை 
வாசனை இல்லாமல்) மண்டி ருசியாகவும் வாசமாகவும் 
இருக்கும்.வரமிளகாய் தாளிக்கும்போது சேர்க்கலாம் 

வெண்டிக்காய் வழு வழுப்பு பிடிக்காதவர்கள் அதை 
சேர்க்காமலும் செய்யலாம்.

இங்கே நான் செய்திருப்பது கத்தரிக்காய் வெண்டிக்காய் 
உருளைக் கிழங்கு மண்டி. 6 பேர் சாப்பிடலாம்.

-மீனா