Saturday, February 19, 2011

பூகோஸ்(காலிஃப்ளவர்)சூப்


ஒரு கை துவரம் பருப்பை நான்கு கப் தண்ணீரில் 
குழைய வேக வைத்து எடுத்துக்கொண்டு ஒரு 
காலிஃபிளவரை பெரிய துண்டுகளாக வெட்டி,பெரிய
வெங்காயம் ஒன்று நீளவாக்கில் வெட்டி, பச்சை
மிளகாய் ஒன்று இரண்டாக வகுந்து குறுக்கே வெட்டி, 
தக்காளி ஒன்று பொடியாக இப்படி எல்லாவற்றையும் 
வெட்டி வைத்துக்கொண்டு..

சட்டியை அடுப்பில் ஏற்றி ஒரு கரண்டி நெய்விட்டு
அதில் ½ டீஸ்பூன் உளுத்தம்பருப்பு, ½ டீஸ்பூன்
பெருஞ்சீரகம்,½ டீஸ்பூன்(கரு)மிளகு,1சிறிய லவங்க
இலை,1சிறிய துண்டு பட்டை,இவைகளை போட்டு
பொரிந்ததும் கறிவேப்பிலை கிள்ளிப்போட்டு,அத்துடன்
வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு கிண்டி
பச்சைமிளகாயையும் போட்டு ஒரு கிண்டு கிண்டி 
தக்காளியையும் சேர்த்து நன்றாக மசிந்து வெந்ததும் 
காலிஃப்ளவரை சேர்த்து, பருப்பு வேக வைத்த
தண்ணீரை அதில் ஊற்றி, பருப்பை நன்கு மசித்து
சேர்த்து மூடி வைத்து சிறிது நேரம் கொதித்த பிறகு
தேவையான உப்பு சேர்த்து,காலிஃப்ளவர் வெந்தது
பார்த்து இறக்கிவிடவேண்டும்.


















சுடச்சுட சாப்பிட்டால் மிக ருசி.

பிகு:மேலே குறிப்பிட்டிருக்கும் செய்முறை அளவு மூன்று
பேருக்கானது.

காலிஃபிளவர் அதிகம் வேகக்கூடாது.முக்கால் பதம்
வெந்தால் ருசி.

காரம் வேண்டாம் என நினைப்பவர்கள் பாதி அல்லது
கால் பச்சைமிளகாய் சேர்த்தால் போதுமானது.

சூப்பிற்கு பருப்பு வேகவைத்த தண்ணீர் மட்டும் போதும்.
பருப்பை சாம்பாரிலோ அல்லது பொரியலிலோ சேர்த்து 
கொள்ளலாம். சூப் மட்டும்தான் சமைக்கப்போகிறோம்
என்றால் பருப்பை கொஞ்சமாக(ஒருகை)வேகவைத்து
சேர்க்கலாம்.
   

Wednesday, January 12, 2011

மண்டி

காய்கறிகள்:கத்தரிக்காய்,உருளைக்கிழங்கு,வாழைக்காய்,
முருங்கைக்காய்,வெண்டிக்காய்,இவைகளை சிறிய 
துண்டங்களாக வெட்டி இரண்டு கப் எடுத்து கொள்ள
வேண்டும்.

மொச்சை ¼ கப் முதல் நாள் ஊறவைத்தது.,தேங்காய் 
மெல்லிசாக கீறியது ஐந்து 

ஒரு தக்காளி,சிறிய வெங்காயம் தேவையான அளவு, 
பூண்டு 5 பல்,(பூண்டு வெங்காயம் வெட்டவேண்டியதில்லை),
பச்சைமிளகாய் 3 (லேசாக வகுந்து போடலாம்),வரமிளகாய் 2.


(சாதம் சமைப்பதற்கு முன் மறவாமல்)அரிசியில் உள்ள
தூசிகள் போக ஒரு கப் தண்ணீர்விட்டு மேலாக அலசி

முதல் தண்ணீரை கீழே ஊத்தியபிறகு 

மேலும் இரண்டு தடவை இரண்டு கப் தண்ணீரை சிறிது 
சிறிதாக ஊற்றி உரசி கழுவி(மண்டி)எடுத்து 


அதில் தேவையான உப்பு புளி போட்டு 

கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவேண்டும்.

சட்டியை அடுப்பில் வைத்து ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணை
ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு,உளுத்தம்பருப்பு ஒவ்வொரு
டீஸ்பூன்
  
போட்டு பொரிந்ததும் பெருங்காயம் ஒரு பிஞ்ச், வர
மிளகாய்,கறிவேப்பிலை சிறிது கிள்ளிப் போட்டு,பின் 
பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து கிளறி, அதன்பிறகு 
வெண்டிக்காய் சேர்த்து வழு வழுப்பு குறைந்ததும் தக்காளி 
சேர்த்து உடன் மற்ற காய்கறிகளையும் சேர்த்து சிறிது 
நேரம் கிளறி நன்கு தெறங்கியதும் உப்பு புளிகரைத்து 
வைத்துள்ள மண்டியை (தண்ணீரை) ஊற்றி, அத்துடன் கீறிய 
தேங்காய், ஊறிய மொச்சையையும் போட்டு கிளறி மூடி 
வைத்து நன்றாக வெந்தது பார்த்து இறக்க வேண்டும்.


மண்டி சாதத்துடன் அல்லது இட்லி தோசையுடனும் சேர்த்து 
சாப்பிடலாம். 

பிகு: 
இந்த மண்டியில் மாங்காய் வத்தல் சேர்த்தால் ருசி கூடும்.

வாய்வு என்று நினைப்பவர்கள் மொச்சையை தவிர்க்கலாம்.

பூண்டு பிடித்தால் சேர்க்கலாம்..

கீரைத்தண்டு,கேரட்,பீன்ஸ்,அவரைக்காய்,இப்படி எந்த காய்கறிகள் வேண்டுமானாலும் சேர்க்கலாம்.

பச்சைமிளகாய்க்கு பதில் ஊசிமிளகாய் சேர்த்தால்(பச்சை 
வாசனை இல்லாமல்) மண்டி ருசியாகவும் வாசமாகவும் 
இருக்கும்.வரமிளகாய் தாளிக்கும்போது சேர்க்கலாம் 

வெண்டிக்காய் வழு வழுப்பு பிடிக்காதவர்கள் அதை 
சேர்க்காமலும் செய்யலாம்.

இங்கே நான் செய்திருப்பது கத்தரிக்காய் வெண்டிக்காய் 
உருளைக் கிழங்கு மண்டி. 6 பேர் சாப்பிடலாம்.

-மீனா 

Friday, October 22, 2010

வெண்டைக்கா சாப்ஸ்

பிஞ்சு வெண்டைக்காய் பத்து, ஒரு இஞ்ச் நீளம் வெட்டி வைத்துக்கொள்ளவேண்டும்

கடலை மாவு இரண்டு டேபிள் ஸ்பூன்,மிளகாய்த்தூள்
இரண்டு டீஸ்பூன், சோளமாவு ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சதூள் அரை டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட்,
உப்பு தேவைக்கேற்ப.

எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இட்லி மாவு பதத்திற்கு
கரைத்து வைத்துக்கொண்டு அடுப்பில் நான்ஸ்டிக்பேன்
அல்லது சின்ன அளவிலான பாத்திரம் வைத்து தேவைக்
கேற்ற எண்ணை விட்டு சூடானதும் வெட்டிவைத்துள்ள வெண்டைக்காயை மாவில் தோய்த்து எண்ணையில் போட்டு பொன் நிறமாக எடுத்து சூடாக சாப்பிட்டால் மொறு மொறு வென்று ருசியாக இருக்கும்!


மதியம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையான ச்சாப்ஸ்!

மாலை ’டீ’க்கும் சில்லி சாஸ் தொட்டு சாப்பிட மிக பொருத்தம்!

பிகு: சோளமாவிற்கு பதில் கடையில் கெண்டக்கி மாவு
(Kentucky flour)  கிடைத்தால் அதை சேர்த்தும் செய்யலாம்.
ருசி கூடும்!.







Saturday, June 19, 2010

மிளகாய் துவையல்

தக்காளி பெரிதாக ஒன்று,
ஒரு கப் தோலுரித்த சின்ன வெங்காயம்,
தோலுரித்த வெள்ளைப்பூண்டுபல் இரண்டு,
ஆறு காய்ந்த மிளகாய்,
நெல்லிக்காய் அளவு புளி,
உப்பு தேவைக்கேற்ப.

எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அரைத்துக்
கொண்டு,தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து
மூன்று தேக்கரண்டி எண்ணை விட்டு காய்ந்ததும்
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி, கடுகு அரைத்
தேக்கரண்டி போட்டுத்தாளித்து சிறிது கறிவேப்பிலை
சேர்த்து சூட்டுடன் துவையலில் ஊற்றி கலந்து
கொள்ளவேண்டும்.

பி கு: வெள்ளைப்பூண்டு பிடிக்காதவர்கள் அது
இல்லாமலும் துவையல் செய்யலாம்.

பத்து காய்ந்தமிளகாய் வரை சேர்க்கலாம்.காரமாக
இருந்தால் துவையலின் சுவை கூடும். அவரவர்
ருசிக்கேற்ப காரம் சேர்த்துக் கொள்ளலாம்.

காய்ந்த மிளகாயை சிறிது நேரம் சுடு தண்ணீரில்
ஊறவைத்து அரைத்தால் சீக்கிரம் அரைபடும்.
காரம் இருக்காது.

இந்த துவையல் வெள்ளைப்பணியாரத்திற்கு
மட்டுமல்ல இட்லி,தோசைக்கும்கூட நன்றாக
இருக்கும்!

-மீனா

Sunday, June 13, 2010

வெள்ளைப் பணியாரம்



பச்சரிசி இரண்டு கப் , உளுந்து ஒரு டேபிள்ஸ்பூன்
(நிறைய),பால் ஒரு டீஸ்பூன், சர்க்கரை அரை டீஸ்பூன்,
உப்பு கொஞ்சம்,தேவையான அளவு எண்ணெய்.

அரிசி பருப்பு இரண்டையும் ஒன்றாகப்போட்டு ஒரு
மணி நேரம் ஊறியபின் உப்பு சேர்த்து (இட்லி மாவு
பக்குவத்தில்) நன்கு வெண்ணை போல் அரைத்து
எடுத்து, பிறகு உரலை(கிரைண்டரை) சிறிது தண்ணீர்
ஊற்றி கழுவி அந்த தண்ணீரை தனியாக எடுத்து
வைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவுடன் சர்க்கரை,
பால், கழுவிய தண்ணீர் சேர்த்து (இப்போது) தோசை
மாவு பதத்தில் நன்றாக கரைத்துக்கொள்ளவும்.

ஒரு ஏந்தலான (நான்ஸ்டிக்பேன்) சட்டியை அடுப்பில்
வைத்து பணியாரம் வேகவைப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து
எண்ணெய் காய்ந்ததும் ஒரு கரண்டியில் மாவை
எடுத்து எண்ணையில் ஊற்றிய பின்பு அரிகரண்டி
யினால் (வெந்து கொண்டிருக்கும் பணியாரத்தின்
மேல் கரண்டி பட்டுவிடாமல்) சுற்றிலும் உள்ள
எண்ணெயை பணியாரத்தின்மேல் எடுத்து உற்றவும்,
பணியாரம் உப்பி மேலெழும்பியதும் மறுபுறம்
திருப்பி விட்டு உடனே எடுத்து விட வேண்டும்.
(அதிகம் வெந்தால் கோல்டன் பணியாரமாக மாறி
விடும்)

இந்த வெள்ளைப் பணியாரத்துடன் தொட்டுக்கொள்ள
சீனி அல்லது மிளகாய்த்துவையல் சேர்த்து சாப்பிட்டால்
அதன் சுவையே அலாதிதான்!

-மீனா

Thursday, June 3, 2010

முந்திரி கேக்

1 கப் முந்திரிபருப்பு,
1 கப் கடலை மாவு,
2 கப் தண்ணீர்
2 கப் சக்கரை,
1 கப் நெய்,
2¼ கப் பால்

முந்திரிப்பருப்பை பாலில் ஊறப்போட்டு நன்றாக
ஊறியபின் அரைத்துவைத்துக்கொண்டு, சர்க்கரையை
தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கம்பிப்பதம் வந்ததும்
அரைத்துவைத்துள்ள முந்திரி விழுது,கடலைமாவு
இவைகளை சர்க்கரை பாகில் போட்டு சிறிது சிறிதாக
நெய் விட்டு கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு
வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி நெய் தடவிய
தட்டில் கொட்டி சமப்படுத்தி சிறிது ஆறியதும் துண்டம்
போடலாம்.

பிகு: இதையே கடலைமாவிற்கு பதில் பால்கோவா
½ கப் சேர்த்தும் செய்யலாம்.

-மீனா

Tuesday, April 20, 2010

சைவ நாசிலெமாக்

 
                              (இது அசைவம்!)

தேவையனவை:

பச்சரிசி 1 கப்(200கிராம்)
தேங்காய் 1 மூடி
உப்பு தேவைக்கேற்ப
உருளைகிழங்கு 2 (சிறியதாக)
நிலக்கடலை 50 கிராம்
எண்ணை ½ கப் (பொரிப்பதற்கு)
லவங்கம் ½ பூ
பண்டான் 2 இலை
எலுமிச்சம்பழம் ½ மூடி
இஞ்சி துண்டு ¼ இஞ்ச்
வெள்ளரிக்காய் 1
சைவ நெத்திலி 200 கிராம்}
அல்லது வாழைப்பூ 1
(மேலாக உள்ள மூன்று அடுக்கு)
பெரிய வெங்காயம் 1
தனி மிளகாய்த்தூள் 1½ தேக்கரண்டி
புளி நெல்லிக்காய் அளவு


செய்முறை:

தேங்காயைத் துருவி (2¼ கப் தண்ணீர் விட்டு பால்
எடுக்க வேண்டும். அரிசியை கழுவி தேங்காய்ப்பாலை
அத்துடன் சேர்த்து,இஞ்சி அரைத்தது, பண்டான் இலை,
லவங்க பூ, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து அடுப்பில்
(பிரஷர் குக்கரானால் 12 நிமிடம்) வைத்து கொதி
வந்ததும் அடுப்பை நன்கு குறைத்து இளம் சூட்டில்
வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

கடலையை எண்ணையில் வறுத்து எடுத்துக்கொண்டு,
வாழைப் பூவையும்(உள்ளிருக்கும் நரம்பை நீக்கி)
எண்ணையில் பொரித்து எடுத்து சிறிய உருளைக்
கிழங்கை சிறிது உப்பு சேர்த்து அவித்து தோலை
உரித்து இரண்டாக வெட்டி வைத்து கொண்டு,
வெள்ளரிக்காயை தோல் சீவி கழுவி அதன் மேல்
பாகத்தின் முழுதும் நீட்டவாக்கில் முள் கரண்டியால்
கீறிவிட்டு பிறகு வட்டமாக மெலிதாக வெட்டி
வைத்துக்கொள்ள வேண்டும்.

சம்பல் செய்முறை :

அடுப்பில் தட்டையான ஒரு பாத்திரத்தை வைத்து
சிறிது எண்ணை விட்டு அதில் பொரித்த வாழைப்பூ,
வெட்டி வைத்துள்ள வெங்காயம், சேர்த்து 1 நிமிடம்
கிளறி பின் அதனுடன் மிளகாய்த்தூள் சேர்த்து புளியை
1/4கப் தண்ணீரீல் கரைத்து தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து
மூடி சிறிது நேரம் வேகவிட்டு எண்ணை மிதந்ததும்
இறக்கி வைத்துக்கொள்ள வெண்டும்.

ஏற்கனவே சமைத்துவைத்துள்ள சாதத்தை(தேங்காய்
மூடிபோன்ற) குழியான சின்ன கிண்ணத்தில் எடுத்து
கரண்டியால் சம மாக அமுக்கி சாப்பாடு பரிமாறும்
தட்டின் நடுவில் குப்புறகொட்டினால் அழகாக விழும்.
அதை சுற்றிலும் உருளைகிழங்கு,பொரித்த கடலையில்
பாதி,வட்டமாக வெட்டிவைத்திருக்கும் வெள்ளரிக்காய்
ஐந்து, காளான்சம்பல் ஒரு கரண்டி, எலுமிச்சை
எல்லாவற்றையும் வைத்து பரிமாறவேண்டும்.

சாப்பிடும் போது எலுமிச்சையை பிழிந்து விட்டு
மற்ற எல்லாவற்றிலும் கொஞ்சம்கொஞ்சம் எடுத்து
சாதத்துடன் சேர்த்து சாப்பிடவேண்டும்.

 குறிப்பு:

பண்டான் என்பது ஒரு இலை அது மலேசியாவில்
கிடைக்கும். மற்ற நாட்டில் கிடைக்குமா என்பது
தெரியவில்லை பண்டான் இலை இல்லையென்றால்
பதிலுக்கு கொத்தமல்லி உபயோகிக்கலாம்.அதே
போல் மலேசியாவில் சைவ நெத்திலி(அயிரை)
மீன் கிடைக்கும். சைவ நெத்திலியோ,வாழைப்
பூவோ கிடைக்கவில்லையென்றால் பதிலுக்கு
காளானை எண்ணையில் பொரித்தும் உபயோகிக்
கலாம்.அல்லது கொத்தவரங்காயை இரண்டு
பக்கமும் நுனியில் வெட்டி முழுதாக சிறிது
உப்பு போட்டுபிசறி எண்ணையில் வறுத்து
சாதத்துடன் சாப்பிடலாம். அதையே சம்பலும்
செய்யலாம்.கொத்தவரங்காய் நல்ல பிஞ்சாக
இருக்க வேண்டும்.

எலுமிச்சை பிடிக்காதவர்கள் அது இல்லாமலேயே
சாப்பிடலாம்.

சம்பல் செய்யும்போது எண்ணை கொஞ்சம் அதிகம்
இருந்தால்த்தான் நாசிலெமாக் சுவையாக இருக்கும்.

முட்டை மட்டும் சாப்பிடுபவர்கள்.உருளை
கிழங்குக்கு பதில் முட்டையை சேர்த்துக்
கொள்ளலாம்.

-மீனா